Saturday, December 6, 2008

துப்பாக்கியுடன் விமானத்தில் அமிதாப்

நேற்று இரவு புனே செல்வதற்காக ஜெட் ஏர்வேய்ஸ் பயணிகள் விமானத்தில் அமிதாப் துப்பாக்கியுடன் சென்றிருக்கிறார். ஆனால் அவரிடம் இருந்த ஆவணங்கள் அந்த துப்பாக்கியுடயது அல்ல.அவரிடம் 3 துப்பாக்கிகள் இருப்பதாகவும் ,வேறு ஒரு துப்பாக்கியின் ஆவணங்களை தவறுதலாக எடுத்து வந்துவிட்டதாகவும் கூறி இருக்கிறார்.தீவிரவாத செயல்களால் அதிக பாதுகாப்பில் இருக்கும் மும்பை விமான நிலையத்தில் இவர் இப்படி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.கடைசியில் துப்பாக்கி இல்லாமலே பயணித்திருக்கிறார்.துப்பாக்கியுடன் அவர் வந்தது அவரது பாதுகாப்பிற்கு என்று வைத்து கொண்டாலும் கூட ,சற்று மிகையாகவே படுகிறது.இதெல்லாம் போக ,இது போன்ற சமயங்களில் பிடிப்பட்ட நபர் அமிதாப் அல்லாமல் வேறு நபராக இருந்திருந்தால் அவரை CISF அல்லது போலீசிடம் ஒப்படைத்து இருப்பார்கள்.நமது நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொது அல்ல என்ற தோற்றம் இதனால் ஏற்படுகிறது.இப்படி ஒவ்வொரு காவல் அதிகாரியும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சலுகைகள் அனுமதித்தால் ஏன் தீவிரவாதம் தழைத்து ஓங்காது? அமிதாப் ஒரு பிரபலம் என்பதால் இந்த செய்தி வெளயில் கசிந்து விட்டது.இதுவே வேறு ஒரு நபராக இருந்தால் இது போன்ற செயல்கள் வெளி உலகிற்கு தெரியாமலே நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.இன்னமும் நாம் எந்த பாடமும் கற்று கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.அது சரி அமிதாபுக்கு தான் நிஜ வாழ்கையிலும் 'டான்' என்று நினைப்போ என்னவோ ?

Friday, December 5, 2008

திவாலாகும் மிக பெரிய நிறுவனங்கள்

நிதி நெருக்கடி மற்றும் 'melt down' காரணமாக மிக பெரிய நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது என்று பரவலாக நம்பப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள என்றான் (Enron) நிறுவனம் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. ஆனால் இதற்கும் பொருளாதார 'slow down' க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மிக பெரிய மோசடி செய்து உள்ளார்கள். இதற்க்கு தணிக்கை நிறுவனம்,வங்கிகள் போன்றவையும் துணை போய் உள்ளது தான் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விடயம். புகழ்பெற்ற தணிக்கை நிறுவனம் ஆண்டெர்சன் பணம் பெற்றுக்கொண்டு என்றான் நிறுவனத்தின் நட்டத்தையும் கடன்களையும் பங்குதாரர்களிடம் இருந்து மறைத்து உள்ளது. இதை விட அதிர்ச்சி தரும் விடயம் என்றானின் தலைமை நிர்வாகி (CEO) நிதி முறைகேடு செய்து கோடி கணக்கில் சம்பாதித்து உள்ளார் என்பது. இவர்களுக்கு கடன் கொடுத்து உதவிய சிட்டி பாங்கும் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளது. இதெல்லாம் தெரிந்தே நடந்தது என்றும் சந்தேகமும் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி கொள்ளை லாபமும் அடைந்திருக்கிறார்கள். இது தான் இந்தியாவிலும் நடந்திருக்கிறது. participatory note மூலம் வெளிநாட்டு பணம் இந்திய பங்கு சந்தையில் புரண்டு பங்கு சந்தை உயர்வு கண்டது. இந்த பணத்தை இவர்கள் திரும்பபெற்றவுடன் பங்கு சந்தை சரிய தொடங்கியது. மாட்டிகொண்டது அப்பாவி பொதுஜனம் தான்.ஏற்கனவே lehman brothers என்ற பெரிய நிறுவனம் மஞ்சள் கடுதாசி கொடுத்து அமெரிக்காவில் பல வங்கிகளை சிக்கலில் மாட்டிவிட்டது.இதில் இந்திய வங்கி ICICI யும் ஓன்று.தற்பொழுது பிரபல கார் நிறுவனம் GM (General Motors) திவாலாகி மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது.லட்ச கணக்கில் அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளார்கள்.இன்னும் பலர் இழக்கும் அபாயமும் உள்ளது. மற்றொரு பெரிய கார் நிறுவனம் Chrisler உம் வெகு விரைவில் மூடுவிழா நடத்தும் என்று சொல்ல படுகிறது. இந்த நிறுவனமும் ,GM மும் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் உள்ளது.அமெரிக்க அரசுக்கு மிக பெரிய நெருக்கடியை இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை அளித்துள்ளது. அரசு நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் நிறுவங்களை மூடுவதை தவிர வேறு வழி இல்லை என்று இந்த நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது. செயற்கையாக ஏற்படுத்தப்படும் பங்கு சந்தை உயர்வை இந்தியர்கள் சந்தேகத்துடனே பார்கவேண்டும் .ஹர்ஷத் மேத்தா கற்பித்த பாடம் வெகு சீக்கரத்தில் நம் மக்கள் மறந்து விட்டார்கள்.20000 தாண்டி சென்ற சென்செக்ஸ் இவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இப்பொழுது 10000 க்கும் கீழ் இருக்கும் சென்செக்ஸ் கவலை அளிக்கிறது.சட்டங்களை திருத்தி நிறுவனங்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களின் கட்டுபாட்டை அதிகரிப்பதற்கு அமெரிக்க அரசு தற்பொழுது யோசித்து வருகிறது.நமது நாட்டில் participatory notes குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்வி கணைகளுக்கு இன்று வரை அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. professional integrity தணிக்கயார்களிடம் இல்லாதது மிக பெரிய அதிர்ச்சி அளிக்கும் விடயம்.நான் இந்த பதிவு எழுதும் சமயத்தில் தொலைகாட்சியில் கேட்ட செய்தி - ரிலையன்ஸ் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக 5000 நபர்களுக்கு வேலை இழப்பு திட்டம் வகுத்துள்ளது. நமது நாட்டில் பெரிய நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது என்று இன்று வரை அவர்களின் ஆண்டு அறிக்கையை வைத்து மட்டுமே நமது பொது ஜனமும் பங்குதாரர்களும் எடை போடுகிறார்கள்.அதிலும் இது போன்ற குளறுபடிகள் ஏதும் உள்ளதா என்று காலம் தான் சொல்ல வேண்டும்.

Sunday, November 30, 2008

நெத்தியடி

மும்பை பயங்கரத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பெங்களூரு வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர் அச்சுதானந்தனக்கும் மந்திரி பாலக்ரிஷ்ணனுக்கும் சந்தீபத்தின் தந்தை உன்னிகிருஷ்ணன் அளித்த வரவேற்ப்பு நெத்தியடியாக அமைந்தது. பெங்களூரில் நடந்த சந்தீப்பின் இறுதி சடங்கிற்கு கர்நாடக முதல்வர் எட்டியூரப்பா சென்றிருந்தார்.உடனே கேரளத்தில் உள்ள எதிர்கட்சிகள் கேரளாவை சேர்ந்த சந்தீப்பின் இறுதி சடங்கிற்கு கேரள முதல்வர் செல்லாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.இதை பார்த்து இவர் பெங்களூருக்கு இரண்டு நாட்கள் போன பின்பு பயணம் செய்தார்.அங்கு அவரது பாதுகாப்புக்கு மோப்ப நாய்களை விட்டு சந்தீப்பின் வீட்டை சோதனை இட செய்திருக்கிறார்கள். மகனை இழந்து வாடும் பெற்றோர்களை இது மிகவும் பாதித்திருக்கும்.முதல்வர் சென்றது ஒரு தீவிரவாதியின் வீட்டிற்கு அல்ல.வீர மரணம் அடைந்த ஒரு ராணுவ வீரரின் வீட்டில் இது போன்ற சோதனைகள் தவிர்க்கபட்டிருக்கலம்.அதனால் தானோ என்னவோ சந்தீப்பின் தந்தை முதல்வரை பார்ர்க்க மறுத்துவிட்டு மிகவும் கோபமாக அவர்களை வெளியே செல்லுமாறு கூறியிருக்கிறார்.தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் ஆதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளுக்கு தகுந்த படம் புகட்டப்பட்டுள்ளது.

Saturday, November 29, 2008

மும்பை தந்த பாடம்

மும்பையில் மூன்று நாட்களுக்கு ஒரு யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது.உயிரை பணயம் வைத்து சிக்குண்டவர்களை மீட்ட தனிபடையினர்,காவல் துறையினர் ராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் நாட்டு மக்களின் ஏகோபித்த பாராட்டுக்கு உரியவர்களே.இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு அரசு முனைப்புடன் திட்டமும் நடவடிக்கையும் எடுக்கிறது. இருந்தும் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது.ஒரு தீவிரவாத நிகழ்வு நடந்த சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே உளவுத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சில துப்புகளை வெளியிடுகிறார்கள்.இன்னும் சில சமயங்களில் தீவரவாதி ஊடுருவியது எவ்வாறு என்றும் தெரிவிக்கிறார்கள்.இந்த தகவல்கள் முன்கூட்டியே தெரிந்திருந்தும் ஏன் தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.சந்தேகத்தின் அடிப்படையில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க போதுமான அதிகாரங்கள் இருந்தும் ஏன் இந்த சுணக்கம் என்று ஆராய்ந்து உடனடியாக தீர்வு காணவேண்டும்.துப்புகள் இருந்தும் நடவடிக்கை எடுக்க என்ன தடையாக இருக்கிறது? அரசியல் காரணங்களா அல்லது வேறு காரணங்கள் ஏதும் உண்டா என்று தெரியவில்லை. இது போன்ற நிகழ்வுகள் எப்படி நடக்கும்,எப்போது நடக்கும்,எங்கு நடக்கும் என்று தெரியாத வரையில் இது ஒரு மிக பெரிய சவால் தான். வெளியில் செல்லும் குடும்பத்தினர் பாதுகாப்புடன் திரும்புவார்களா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.ரயில்,பஸ் மற்றும் விமான பயணங்களும் ஆபத்தானவை ஆக மாறி விட்டது.ஒருபுறம் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையும் மறுபுறம் பிடிபட்ட தீவிரவாதிகளை திருத்தி மறுவாழ்வு அளிக்கவும் அரசு முன் வரவேண்டும். சவுதி அரேபியாவில் பிடிபடும் தீவிரவாதிகளுக்கு அரசு கவுன்சிலிங்க் செய்து மறுவாழ்வு அளிக்கிறது.தவறான வழி காட்டுதலே தீவிரவாதத்திற்கு காரணம்.சவுதியில் இந்த முறை வெற்றிகரமாக இருக்கிறது. திரும்பவும் தீவிரவாதத்திற்கு செல்பவர்கள் மிக மிக குறைவே.மதம்,இனம்,சாதி வேறுபாடுகளை குறிவைத்து தீவிரவாதம் பேசும்,செயல்படும் அனைத்து தரப்பினரையும் எந்த வித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நமது காவல்துறையினருக்கு அரசியல் குறுக்கீடு இல்லாமல் இருந்தாலே போதும் என்று நான் நினைக்கிறேன்.கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து அரசியல் வாதிகளும் அரசியல் கட்சிகளும் காவல்துறையினர் எடுக்கும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் குறிக்கிடாமல் இருக்கவேண்டும்.கடல்,ரயில்,பஸ் மற்றும் விமானம் மூலமாக நாட்டிற்குள் வரும் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவரை தடுக்கும் அதிகாரம் இன்னும் பரவலாக்க படவேண்டும். எல்லை பாதுகாப்பு இன்னும் தீவிரமாக்கி ஊடுருவல்களை தடுக்கவேண்டும்.சந்தேகப்படும்படியான பிரசுரங்கள்,இணையதளங்கள் இவைகளை வெளயிடும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.மாநில காவல் துறையினர்க்கும் தீவிரவாதத்தை தடுக்க போதுமான அதிகாரங்கள் வழங்கவேண்டும்.தீவிரவாதத்தை எதிர்த்து பொதுமக்களை திரட்டி அவப்போது விழிப்புணர்வு போராட்டங்கள் நாடு முழுவதும் தன்னார்வ நிறுவனங்கள் நடத்தவேண்டும்.தீவிரவாதத்தை தைரியமாக எதிர்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டிய பயிற்சிகள் கொடுக்கவேண்டும்.திரண்ட மக்கள் சக்தியை எதிர்த்து எந்த தீவிரவாதமும் தாக்கு பிடிக்க முடியாது.இன்றைய தினம் மக்கள் தீவிரவாதத்தை கண்டு ஒதுங்கிறோம்.நிராயுதபாணியாக இருந்தாலும் தீவிரவாதத்தை எதிர்த்து மக்கள் சக்தி திரளவேண்டும்.சந்தேகத்திற்கு உரிய நபர்கள் நடவடிக்கைகள் குறித்து உடனடியாக தகவல்களை உரியவர்களுக்கு தெரிவிக்க பொது மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தீவிரவாதத்தை தடுப்பது அரசு மற்றும் காவல் துறையினரின் பணி மட்டுமே அல்ல.அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து சுதாரிப்பாக இருந்தால் பல முயற்சிகளை முறியடிக்க முடியும்.மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களை தேர்வு செய்து அழிவு சக்திகள் சதி செய்யும் பொழுது யார் கண்ணிலும் படாமல் இருக்க முடியாது.போதிய விழிப்புணர்வு இல்லாததும் ,பயமும் தான் மக்கள் சக்தி ஓன்று பட தடையாக இருப்பது.எப்படி காவல் துறையினருக்கு உதவ ஹோம் கார்ட் பிரிவு உள்ளதோ அதே போல ஒவ்வொரு ஊரிலும் ஒரு plain cloth Anti terrorist force இருக்க வேண்டும்.இதன் கட்டுப்பாடு காவல் துறையினரிடமோ அல்லது தனிபடயினரிடமோ இருக்க வேண்டும். பொது மக்கள் அதிக அளவில் தீவரவாததிற்கு எதிராக திரும்பினால் மட்டுமே தீவரவாதத்தை ஒழிக்கமுடியும் என்று நான் நம்புகிறேன்.இது ஒரு பொது சேவை என்பதால் தியாக உணர்வோடு இதை அணுகவேண்டும்.சேதங்கள் ஏற்படுமாயின் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.கோடி கணக்கில் இருக்கும் நாட்டு மக்களின் பல ஜோடி கண்கள் தம்மை கண்காணிக்கிறது என்று தீவரவாதிகள் உணர வேண்டும்.காவதுறையினர் எல்லா இடத்திலும் பாதுகாப்பு தரவேண்டும் என்பது இயலாத காரியம்.அரசு தீவிரவாத விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்,செய்தி சுருள்கள்,பத்திரகை விளம்பரங்கள் ,தொலை காட்சி விளம்பரங்கள் ஆகியவை வெளியிட வேண்டும்.மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு கருத்துக்களை ஒளிபரப்ப வேண்டும்.கடுமையான சட்டங்கள்,நவீன ஆயுதங்கள்,இவைகளும் தேவை தான்.ஆனால் இவ்வை எல்லாம் இருந்தும் தீவிரவாதம் கட்டுக்குள் வரவில்லை என்பது தான் நிதர்சனமான் உண்மை.இனி செய்ய வேண்டியது மக்கள் சக்தியை திரட்டுவது ஒன்றே.

Sunday, October 12, 2008

நிதி நெருக்கடியும் தனி மனித பாதிப்புகளும்

நிதி நெருக்கடியில் இருந்து வங்கிகளை காப்பாற்றுவதற்கு சர்வ தேச அளவில் அரசுகள் நிதி உதவி செய்ய தொடங்கியுள்ளது.அமெரிக்கா ,பிரிட்டன் என்று பெரிய நாடுகளும் வங்கிகளுக்கு நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளார்கள். நமது நிதி அமைச்சர் பொது மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்கிறார் . இந்தியாவில் அடிப்படை பொருளாதாரம் நன்றாகவே உள்ளது என்றும் வங்கிகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார். ஆனால் ஒரு புறம் பங்கு சந்தை வீழ்ச்சி காணுகிறது.வங்கிகள் பிற நிதி நிறுவனங்களிலும் பங்குகளிலும் தான் முதலீடு செய்கின்றது.எப்படி இந்த பாதிப்பு வங்கிகளுக்கு இல்லாமல் போகும் என்று தெரியவில்லை.பொது மக்களை பொறுத்தவரை உடனடி பாதிப்பு என்று பார்த்தால் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவு பாதிப்புக்குள்ளாகும்.வங்கி கடன் வட்டி விகிதம் அதிகமாகும்.ஏற்கனவே உள்ள விலைவாசி உயர்வும் சேர்ந்து மக்களை வாட்டி எடுக்கும். பணபுழக்கம் குறைவாக உள்ள இந்த நேரத்தில்,கடன் உதவியும் இல்லை, வட்டி விகிதமும் அதிகம், விலை ஏற்றமும் அதிகம் என்றால் பொது மக்களுக்கு பாதிப்பு நிச்சயம் இருக்க தான் செய்யும்.இந்த சூழ்நிலையில் பத்திரிகையில் படித்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது.இங்கிலாந்து நாட்டில் Funeral Directors என்று உள்ளார்கள். அதாவது இறந்தவரின் உடலை இறுதி சடங்குகள் நடுக்கும் நாள் வரை பதப்படுத்தி வைத்து,ஈம கிரியைகள் எல்லாம் செய்து அடக்கம் செய்பவர்கள் தான் இந்த funeral directors .ஏழைகளுக்கு அந்த நாட்டில் இறுதி சடங்கு செய்வதற்கு அரசாங்க உதவி உண்டு.தற்போது உள்ள நிதி நெருக்கடியால் அரசாங்க நிதி கிடைப்பதற்கு தாமதம் ஆவதால் இந்த funeral directors முன்பணம் தந்தால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறுகிறார்களாம்.அரசாங்கம் நிதி நெருக்கடியால் பணம் தாமதமாக தான் கொடுக்க முடியும் என்று கூறுகிறார்களாம்.அங்கு இறந்த உடல் அடக்கம் செய்வதற்கு சராசரியாக பத்து நாட்கள் ஆகுதாம்.தற்பொழுது நிதி நெருக்கடியால் இது ஐந்து வார காலம் தாமதாகலாம் என்று கூறுகிறார்களாம்.அங்கு ஆண்டுக்கு சுமார் 27000 நபர்கள் இந்த அரசு உதவியயை பெறுகிறார்களாம்.இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?

Saturday, October 4, 2008

வருங்காலம் எப்படி இருக்கும்?

ரே கர்சவீல்(Ray Kurzweil) என்பவர் இன்றைய உலகில் எடிசனுக்கு இணையாக கருதப்படுபவர்.கணினி வந்த பின்பு நமது வாழ்க்கையில் பல விடயங்கள் மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.சர்வம் கணினி மயம் என்றாகிவிட்டது.இவர் பல விடயங்களை குறித்து கணிப்புகள் கூறியுள்ளார். அதிலொன்று 2025 ஆம் ஆண்டு மனித மூளைக்கு நிகரான செயல் திறன் உள்ள கணினி உருவாக்கப்படும் என்பது தான்.2030 இல் மனித மூளைய விட ஆயிரம் மடங்கு வேகமும் திறனும் உள்ள கணினிகள் தயாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்.இதற்க்கு மேலும் கூறுகிறார்.2045 களில் உருவாக்கப்படும் கணினிகள் மனித மூளை திறனால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மேம்பட்டு இருக்கும் என்கிறார்.இந்த நிலைமை எட்டும் காலத்தை அவர் "Point of Singularity" என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்.இவை எல்லாம் நடக்காது என்று யாராலும் அறுதியிட்டு கூறமுடியாது.நடப்பதற்கு சாத்தியகூறுகள் மிக மிக அதிகம்.ஆனால் நான் நினைப்பது ,இவ்வை எல்லாம் நடப்பதற்கு முன்பே உலகில் க்ளோனிங்க் மூலம் குழந்தைகளை உருவாக்க சட்டரீதியாகவே எதோ ஒரு நாட்டில் அனுமதிப்பார்கள் என்றே கருதுகிறேன்.கடந்த ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தால் ,நமது அன்றாட வாழ்கையிலேயே என்னவெல்லாமோ மாற்றங்கள் வந்துவிட்டது.

Wednesday, September 17, 2008

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்சம் ...

98 கோடி ரூபாய் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் லஞ்சமாக கொடுத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? .நம்புங்கள், இது நடந்தது வேறு எங்கும் அல்ல.கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மக்கள் 98 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்கள்.Transparency India International and Centre for Media Studies என்ற அமைப்பு TII-CMS corruption study 2007 என்று ஒரு ஆய்வு நடத்தியது. அவர்கள் வெளியிட்டது தான் இந்த அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்.அதாவது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சராசரியாக ரூ. 477 லஞ்சமாக கொடுத்துள்ளதாக அர்த்தம். லஞ்சம் வாங்கியவர்கள் பெரும்பாலும் அரசு அதிகாரிகளே.நடு தரகர்கள் அல்ல.பொது விநியோகம்,மருத்துவமனை,மின்சார துறை,கல்வி துறை,குடிநீர் வாரியம்,வங்கிகள்,கிராம புற வேலை வாய்ப்பு திட்டம்,காவல் துறை,வீடு மற்றும் மனை பத்திர அலுவலுகம், என்று அனைத்து துறையினருமே லஞ்சம் பெற்றுள்ளார்கள்.எதையும் விட்டு வைப்பதில்லை போலும். 43 விழுக்காடு நபர்கள் லஞ்சம் கொடுத்ததற்கு அரசு அதிகாரிகளை குறை கூறினார்கள்.37 விழுக்காடு நபர்கள் தங்களேயே குறை கூறினார்கள். மீதம் உள்ளவர்கள் அரசியல்வாதிகளை குறை கூறினார்கள்.எப்படியோ லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்களும் இருக்க தான் செய்வார்கள்.அனைவருக்கும் தேவைகள் அதிகமாகி விட்டது.ஆசைகளும் அதிகமாகி விட்டது.என்ன விலை கொடுத்ததும் வங்க தயாராக உள்ளார்கள்.அதை ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.கொடுப்பவர்களும் சரி,வாங்குபவர்களும் சரி ,தவறென்று உணர்ந்து திருந்தினாலே ஒழிய லஞ்சம் இருந்து கொண்டே தான் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.இன்னொரு அதிர்ச்சி தகவல் ,தேசீய அளவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ம்க்கள் சுமார் 900 கோடி ரூபாய் கடந்த ஓராண்டில் லஞ்சமாக கொடுத்துள்ளார்கள் என்றும் இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.இந்திய ஒரு வளரும் நாடு.எதில் என்றும் கூற வேண்டுமோ?

Friday, August 22, 2008

வலைப்பதிவில் கவர்ந்தது

சமீபத்தில் படித்த தமிழ் வலை பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த இந்த பதிவை கீழே தந்துள்ளேன். ஒவ்வொரு தமிழாக்கத்தையும் நான் மிகவும் ரசித்தேன். ( நன்றி அப்துல் மாலிக்,முத்துபேட்டை நண்பர்களின் வலைப்பதிவு )

"பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் அவர் கண்டுபிடித்த விண்டோசை சென்னை மக்கள் எப்படி அழைத்திருப்பார்கள். என்று பார்போம்
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
windows = ஜன்னல்

Save = வெச்சிக்கோ

Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தெற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழ்சு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

Run = ஓடு நய்னா

Execute = கொல்லு

Print = போஸ்டர் போடு

Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து

Copy = ஈயடிச்சான் காப்பி

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

Delete = கீச்சிடு

anti virus = மாமியா கொடுமை

View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு

Toolbar = ஸ்பானரு செட்டு

Spreadsheet = பெரிசிட்டு

Database = டப்பா

Exit = ஓடுறா டேய்

Compress = அமுக்கி போடு

Mouse = எலி

Click = போட்டு சாத்து

Double click = ரெண்டு தபா போட்டு சாத்து

Scrollbar = இங்க அங்க அலத்தடி

Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு

Next = அப்பால

Previous = முன்னாங்கட்டி

Trash bin = கூவம் ஆறு

Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி

Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?

Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?

Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி

Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!

Unrecoverable error = படா பேஜார்பா

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்

Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
- ரசிகவ் ஞானியார் "

Saturday, August 16, 2008

காஷ்மீரும் அமர்நாத் பிரச்னையும்

சில நாட்களாக காஷ்மீரில் நடக்கும் கலவரங்களும் போராட்டங்களும் மிகுந்த மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா தனது 61 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் காஷ்மீரி சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் லாபம் தேட நினைக்கும் அரசியல் கட்சிகளே இதற்க்கு முக்கிய காரணம். பொதுமக்கள் இதை புரிந்து கொள்ளும் நாள் என்று தான் வருமோ? .இதை ஆரம்பித்து வைத்த அரசியல் கட்சிகளுக்கே இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை நிலவரம்.கலவரத்தில் ஈடுபடும் இரண்டு சமுதாய நண்பர்களும் முக்கியமான சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்வது மிகவும் முக்கியம். இரு சமுதாய மக்கிளிடையே நிலவி வந்த நல்லெண்ணத்தினால் உருவான ஒரு ஆலயம் தான் இந்த அமர்நாத் ஆலயம்.சரித்திர சான்றுகள் படி காஷ்மீர் ஒரு பெரிய நீர் தேக்கம் ஆக இருந்திருக்கிறது. காஷ்யப ராய் என்பவர் இந்த நீரை வெளியேற்றிய போது அமர்நாத் குகையும் லிங்கமும் தெரிந்ததாக கூறப்படுகிறது.பின்னர் பெர்கிஷ் ரேஷி என்பவர் ஹிமாலயத்திற்கு செல்லும் போது மீண்டும் இந்த குகையும் லிங்கத்தையும் கண்டிருக்கிறார்.மற்றுமொரு முறை பூட்டா மாலிக்கு என்ற முஸ்லீம் இடைய சிறுவனுக்கு ஒரு முனிவர் ஹிமாலயத்தில் வைத்து ஒரு சாக்கு மூட்டை நிறைய கரி கட்டைகளை கொடுக்கிறார். வீட்டுக்கு வந்த சிறுவன் மூட்டையை திறந்த போது மூடை முழுவதும் தங்கமாக இருந்திருக்கிறது.சந்தோஷத்தில் முனிவரை பார்க்க மீண்டும் அந்த இடத்திற்கு செல்கிறான் அந்த சிறுவன். அங்கு அந்த முனிவர் இல்லை. ஆனால் அந்த இடத்தில் ஒரு குகையும் லிங்கமும் தென்படுகிறது.அன்று முதல் அமர்நாத் ஹிந்துக்களின் புண்ணிய ஸ்தலம் ஆக மாறுகிறது. மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ,இன்று வரை அமர்நாத் கோவிலுக்கு கிடைக்கும் காணிக்கை வருமானத்தில் இருந்தது ஒரு பங்கு அந்த முஸ்லீம் சிறுவனின் வழி தோன்றல்களுக்கு அளிக்கப்படுகிறது.மீதம் உள்ள பணத்தை மட்டுமே கோவில் அறகட்டளை எடுத்து கொள்கிறது. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்தே பனி லிங்கம் தரிசிக்க பட்டதற்கான சரித்திர சான்றுகள் உள்ளது.நமக்கு தெரிந்து பாடல் பெற்ற ஸ்தலம் தான் அமர்நாத்.
இது மட்டுமல்ல ,காலம் காலமாக அமர்நாத் யாத்திரை சென்று வரும் பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் , காஷ்மிரீ முஸ்லீம்கள் அன்னதானம் செய்து வந்திருக்கிறார்கள்.இன்றும் செய்கிறார்கள்.இரு சமுதாயத்தினரிடையே உள்ள நல்லெண்ணத்திற்கு இதுவே சான்று.இப்படி இருக்கையில் அரசாங்கத்தால் அமரநாத் ஆலயத்திற்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா ? இது அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் கட்சிகள் செய்த சூழ்ச்சி.அதே அரசாங்கம் நிலம் அளித்ததை திரும்ப பெற்ற பின்னும் போராட்டங்கள் நடைபெறுவது எதை காட்டுகிறது? அமைதியை விரும்பும் பொதுமக்கள் என்று தான் இதை எல்லாம் புரிந்து கொள்வார்களோ? இன்று நடக்கும் போராட்டம் நிலம் அளித்ததை எதிர்த்து அல்ல. அந்த பெயரில் ஆரம்பித்த போராட்டம் இன்னும் தொடருகிறது.வழக்கம் போல ஆடு நனைந்தால் ஓநாய் வருத்தப்படுவது போல நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்த சாக்கில் குளிர் காய நினைக்கிறது.அதிபர் முஷாரப்க்கு இருக்கும் உள்ளூர் நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக அமர்நாத் பிரச்னையில் மூக்கை நுழைக்கிறார்.இதை நாம் அனுமதிக்கலாமா? அரசியல் மாட்சியங்களை மறந்து ,நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக சம்பந்தபட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடாமல் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் .

Thursday, August 7, 2008

மறந்து போன திறன்கள்

சமீபத்தில் படித்த ஒரு பத்த்ரிகை செய்தி -ஆஸ்த்ரேலியாவில் குழந்தைகளின் கையெழுத்து கோணல் மாணலாக இருக்கிறது என்று அவர்களின் கையை பிடித்து எழுத சொல்லி கொடுக்கிறார்களாம். இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?
கம்ப்யூட்டர் ,லேப்டாப், மொபைல் போன் பயன்படுத்தி அவர்களுக்கு எழுத மறந்து போய்விட்டதாம். இது நமது நகரத்து குழைந்தளுக்கும் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இப்போது தான் தேர்வுகளே ஆன்லைனில் எழுதும் காலம் ஆயிற்றே .
சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்று சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. ஏ.ட்டி.எம் இல் பணம் எடுத்து பழகி விட்ட இன்றைய இளைஞர்கள் பலரும் காசோலையில் தனது கைஎழுத்தயே தவறாக போட்டு விட்டு வங்கியில் சென்று வழிவதை பார்க்கலாம். 150 ஐ 60 ஐயும் பெருக்க இன்று கால்குலேடோர் வேண்டும். கணினி முன்பும் தொலைக்காட்சி முன்பும் அமர்ந்து விளையாட மறந்து விட்டார்கள் இன்றைய குழந்தைகள். இன்னும் என்ன என்ன மறக்க போகிறார்களோ ? . காலம் தான் பதில் சொல்லும்.

Thursday, July 17, 2008

எப்படி வந்தது என்று புரியவில்லை

தமிழ் பேச்சு வழக்கில் ஆங்கில சொற்கள் கலந்து பேசுவதை நாம் பார்த்திருக்கோம். ஆனால் சில ஆங்கில மற்றும் தமிழ் சொற்களை தவறாக பயன்படுத்த படுவதை பார்க்கும் போது இந்த சொற்கள் எப்படி வழக்கில் வந்திருக்கும் என்று நான் யோசிப்பது உண்டு. அதன் விளைவே இந்த கட்டுரை. நன்கு படித்தவர்களும் சரி, படிப்பறிவு இல்லாதவர்களும் சரி அதிகமாக பயன்படுத்தும் ஒரு சொல் 'அசால்ட்' என்பதாகும். எனக்கு தெரிந்து தமிழில் அசால்ட் என்று ஒரு சொல் இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் அசால்ட் (assault) என்று ஒரு சொல் உண்டு. ஆனால் அதற்க்கு பொருளே வேறு. தமிழில் இந்த சொல்லை பயன்படுத்துபவர்கள் பலரும் என்ன பொருளில் பயன் படுத்துகிறார்கள் என்று பார்போம்.

'எந்த பிரச்சினயாக இருந்தாலும் அவர் அசால்டா சமாளிச்சிடுவார்.'
'எதை பற்றியும் கவலையே இல்லை .எப்ப்பவும் அசால்ட் தான்.'

இந்த இடத்தில் அசால்ட் என்ற சொல் என்ன அர்த்தத்தில் பயன் படுத்த பட்டிருக்கிறது என்று பார்ப்போம். சுலபமாக, அனாயசமாக கைகாரியம் செய்யும் திறமை உள்ளவர் என்ற பொருள் .

இரண்டாவது எடுத்துக்காட்டில், care free என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல ஒரு மன நிலை என்ற பொருளில் சொல்லபட்டிருக்கிறது.

தமிழில் அசால்ட் என்று சொல் இல்லை. ஆங்கிலத்தில் அசால்ட் என்றால் ஒருவரை தாக்குவது . ஆங்கில சொல்லுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு பொருளில் இந்த சொல் எப்படி பயன்பாட்டில் வந்திருக்கும் என்று யோசித்ததில் என் அறிவிற்கு எட்டியது என்ன என்று பார்போம். தமிழில் அசட்டை என்று ஒரு சொல் உண்டு. அதன் பொருள் இப்பொழுது சொல்லப்படும் பொருளுக்கு சற்று பொருத்தமாக இருக்கிறது. அசட்டை( indifferent ) என்று ஆங்கிலத்தில் ஒரு பொருள் உண்டு. அந்த பொருள் ஏறக்குறைய சரியாக வரும். அசட்டை என்ற தமிழ் சொல்லை தான் தவறாக அசால்ட் என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இதை விட கொடுமை இன்னொன்று இருக்கிறது. சாதரணமாக பேச்சு வழக்கில் இருக்கும் நல்ல தமிழ் சொற்களை அப்படியே ஆங்கில மொழி மாற்றம் செய்து பேசுபவர்கள் சிலர் உண்டு. இதை இந்திய ஆங்கிலம் என்று கூட சொல்லலாம்.
அந்த காலத்தில் பெண்கள் மத விடாய் காலத்தில் வீட்டில் இருந்து சற்று விலகி இருப்பார்கள். அதற்க்கு சில சமூகத்தினர் 'தூரம்' என்றும் ( வீட்டிலிருந்து தூரத்தில் இருப்பது ), இன்னும் சிலர் 'வீட்டு விலக்கு ' என்று குறிப்பிட்டு வந்தார்கள். ஏனோ சிலர் இப்படி சொல்வது கொச்சையாக இருக்கிறது என்று கருதினார்களோ என்னவோ, அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து 'out of doors'
என்று சொல்கிறார்கள்.
நண்பர் ஒருவரை சந்திக்க போயிருந்தேன். அவரும் இது போல தமிழ் சொற்களை ஆங்கில மொழி மாற்றம் செய்து பேசுபவர். அவர் வரும் வரை காத்திருந்தேன். வீட்டிற்குள் இருந்து வரும் போதே அவர் 'சாரி , அவுட்ட்சைடு போயிருந்தேன் '
என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்குள் இருந்து தானே வருகிறார் , ஏன் இப்படி சொல்கிறார் என்று வியந்தேன். எனது வியப்பை புரிந்து கொண்டு அவர் மீண்டும் தன் கால்களை பார்த்து கொண்டே 'அவுட்டுசைடு போயிருந்தேன்'. ஈரமாக இருந்த அவரின் கால்களை பார்த்து நான் ஓரளவு புரிந்து கொண்டேன். அவர் கழிப்பறையில இருந்து வந்திருக்கிறார் என்று. வீட்டிற்குள் இருக்கும் கழிப்பறையில் இருந்து வருவதை அவர் ஏன் ஆங்கில சொல் ஆன
அவுட்ட்சைடு என்று குறிப்பிடுகிறார் என்று நான் யோசித்தேன். இதுவும் கழிப்பறையில் இருந்து வருகிறேன் என்று சொன்னால் கொச்சையாக இருக்கும் என்று கருதி அப்படியே ஆங்கில மொழி மாற்றம் செய்து பேசுகிறார்கள். சரி, இந்த சொல் எப்படி தான் வந்திருக்கும் ?
அந்த காலத்தில் வீட்டிற்குள் கழிப்பறைகள் இருந்ததில்லை . காலை கடன்களை
கழிப்பதற்கு வெட்ட வெளிக்கு தான் போவார்கள் . வெட்ட வெளிக்கு போவது தான் கால போக்கில் வெளிக்கு போவது என்று மாறிவிட்டது . வெளிக்கு போவது என்றால் எல்லாருக்கும் புரியும். ஆனால் வீட்ட்ற்க்குள் கழிப்பறைகள் வந்த பின்பும் இச்சொல் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. இது கொச்சையாக இருக்கும் என்று கருதி அப்படியே ஆங்கில மொழி மாற்றம் செய்து விட்டார்கள். என்ன கொடுமை சார் இது !!

Wednesday, July 9, 2008

மாறும் அரசியல் காட்சிகள்

மன்மோகன் சிங்க், தனது ஐந்தாண்டு ஆட்சி காலம் முடிவதற்குள், அணு ஆயுத ஒப்பந்தத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று துணிவுடனும் முனைப்புடனும் ஒரு பிரதமருக்கு உரிய செயல் வேகத்தை காட்ட தொடங்கியதும் இடது சாரிகள் வேறு வழியின்றி ஆதரவை பின் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முலயாம் சிங்க் கட்சி,மற்றும் பிற சிறிய கட்சிகளின் ஆதரவை வைத்து கொண்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியம் என்ற நம்பிக்கையில் காங்கிரசும் துணிந்து இடது சாரிகள் ஆதரவை துறக்க தயாராகி விட்டது. காங்கிரசை பொறுத்த வரை அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கால தாமதம் ஏற்படுமாயின் ஒப்பந்தம் நிறைவேற்ற படாமல் போகவும் வாய்ப்புண்டு.தவிர அடுத்த தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே காங்கிரசால் வாக்களர்களை சந்திக்க முடியும். இல்லாவிட்டால் காங்கிரஸ் அரசு ஒரு spineless அரசு என்று மக்கள் நினைக்க ஏதுவாகும். மேலும் மேற்கு வங்கம்,கேரளம்,திரிபுரா போன்ற மாநிங்களில் கம்யூனிஸ்டுகள் காங்கிரசை எதிர்த்து போட்டியிடவேண்டிய சூழ்நிலையில் இடது சாரிகளும் , ஐ.மு.கூ. யில் இருந்து வெளியேற ஒரு சாக்கு தேடி கொண்டிருந்தார்கள். கட்டுக்கடங்காத பண வீக்கமும், விலைவாசி ஏற்றமும் காங்கிரசுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க நேரிடும்,என்று கம்யூனிஸ்டுகள் நம்புகிறார்கள்.

முலயாம் சிங்கை பொறுத்த வரையில், மாயாவதிக்கு எதிரணியில் இருக்கவேண்டும் என்பது ஒன்றே குறிக்கோள். இந்த வாய்பை சரியான முறையில் பயன்படுத்த முற்படும் இன்னொரு கட்சி தேவகவுடாவின் மதசார்ப்பற்ற ஜனதா தளம், பா.மா.க. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பேரம் செய்ய ஏதுவாக எந்த கூட்டணி உள்ளதோ அதன் பக்கம் சாய வாய்புள்ளது.
எது எப்படியோ அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்தியாகிவிட்டது.கட்சி நலனும், தனி நபர் நலனும் முக்கியம் என்று அரசியல் கட்சிகள் முர்ர்ப்படும்,தேச நலனில் மட்டும் அக்கறை கொண்டு செயல் படுவார்கள் என்று நம்புவோம்.

Friday, June 20, 2008

குத்தல் குடைச்சல் வைத்தியம்

தமிழக மற்றும் தேசீய அரசியலில் சலசலப்புகள் ஆரம்பமாகிவிட்டது. ஒரே ஒற்றுமை, மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி, குத்தல், குடைச்சல் கொடுப்பது தோழமை கட்சிகளே. மாநிலத்தில் பா.ம.க வும்,மத்தியில் இடது சாரிகளும் கொடுக்கும் குத்தல், குடைச்சல்கள், ஆளும் கட்சியினரினை பொறுமை இழக்க செய்து வருகிறது.அதன் வெளிப்பாடுகள் தோன்றவும் ஆரம்பித்துவிட்டது.
சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தல் தோல்வி, கட்டுகடங்காத விலைவாசி பிரச்னை, இழுத்து கொண்டிருக்கும் அணு ஆயுத ஒப்பந்த பிரச்சனை, நெருங்கிவரும் நாடாளுமன்ற தேர்தல், சில வட மாநிங்களில் வர இருக்கும் சட்டசபை தேர்தல்கள், பெருகிவரும் பா.ஜ.க வின் செல்வாக்கு, இவை எல்லாம் சேர்ந்து நடுவண் அரசுக்கு, பெரிய தலை வலியாக உள்ளது.மத்திய டாக்டருக்கு (மன்மோகன் சிங்க்) என்ன வைத்தியம் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்று தெரியாமல் அல்லாடி கொண்டிருக்கிறார்.அணு ஆயுத பிரச்சனை ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைக்கு விரைவில் முடிவு காணவேண்டும் என்பதில் பிரதமர் முழு மூச்சாக உள்ளார். இடது சாரிகளோ முட்டுக்கட்டை போடுவதில் முழு மூச்சாக உள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பிற கட்சியினர் ,அணு ஆயுத ஒப்பந்தத்தை ஆதரித்தாலும் தேர்தல் பயம் காரணமாக, இடது சாரிகளின் ஆதரவை இழக்க விரும்பவில்லை. பாவம் நம் பிரதமர். தன் கொள்கைக்காக பதவியை துறக்க முன் வந்தாலும் அவரது கட்சியோ, கூட்டணி தோழமை கட்சிகளோ அவருக்கு ஆதரவு அளிக்க முன் வர யோசிக்கிறார்கள்.இப்படி தன் பிணிகளுக்கு மருத்துவம் தெரியாமல் ஒரு டாக்டர் மத்தியில் விழி பிதுங்கி நிற்கிறார்.

மாநிலத்திலோ இன்னொரு டாக்டர், தனக்கு வந்த குத்தல்,குடைச்சல்களில் இருந்து விடுபட, மருத்துவருக்கே வைத்தியம் பார்த்துவிட்டார். பா.ம.க வினரை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டார். இது ஒரு வகை அதிர்ச்சி வைத்தியம். தேர்தல் நேரத்தில் அணி மாறுவது பா.ம.க விற்கு கை வந்த கலை. இதற்க்கு தோதாக ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்வதை பா.ம.க வழக்கமாக கொண்டிருக்கிறது.முறுக்கிக்கொண்டு கூட்டணியில் இருந்து வெளியேறியதும் அடுத்த கூட்டணி கை நீட்டி வரவேற்கும்.ஆனால் இப்பொழுது வெளியில் தள்ளப்பட்டுள்ளார்.இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.இரண்டு திராவிட கட்சிகளும் பா.ம.க வினரை அம்போ என்று விட்டுவிட்டால் என்ன நடக்கும்.தனியாக வெற்றி பெரும்அளவிற்கு அவர்களுக்கு வலிமை இல்லை. மூன்றாவதாக ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆசையும் பா.ம.க விற்கு உள்ளது.அது நடப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவே.இதே போன்ற ஆசை உள்ள கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,தே.மு.தி.க,ச.ம.மு.க போன்றவைகளும் உள்ளன.ஜெயலலிதாவின் கூட்டணியில் சேர வேண்டுமென்றால் பா.ம.க, மத்திய அரசு பதவியை துறக்க வேண்டி இருக்கும்.அதற்க்கு அவர்கள் இப்பொழுது தயாராக இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஐ.மு.கூ. இருக்க தி.மு.க அனுமதிக்காது.வேலியில்போன ஓணானை எடுத்து காதில் விட்டு கொண்டு குத்துதே,குடையுதே என்று புலம்புவது போல உள்ளது பா.ம.க வின் நிலைமை தற்போது.

என்ன நடக்கும் என்று பொறுத்து இருந்து பார்போம்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

Thursday, June 19, 2008

தனி தமிழ் பதிவுகள்

தமிழ் பதிவுகளையும் எனது ஆங்கில Blog ஆன outshine ல் வெளியிட்டு வந்தேன். இனி மேல் தமிழ் வலை பதிவுகளுக்காக உரத்த சிந்தனைகள் என்ற பெயரில் இந்த தனி தளத்தில் வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன். outshine ல் தொடர்ந்து ஆங்கில வலை பதிவுகளும் தொடரும்.

மனதில் பட்டவைகள் பட்டவர்த்தனமாக உரத்த சிந்தனைகளாக மிக விரைவில் பதிவு செய்ய மிகுந்த ஆவலாக உள்ளேன்.விரைவில் மலையாளத்திலும் எனது
எண்ணங்களை பதிவு செய்ய எண்ணியுள்ளேன். ஒரு multilingual blogger ஆக வேண்டுமென்பது எனது அவா.விரைவில் நிறைவேறும் என கருதுகிறேன்.