Wednesday, January 7, 2009
பொய்யும் சத்யமும்
கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி 'திவாலாகும் பெரிய நிறுவனகள்' என்று நான் எழுதிய இடுக்கையில் இந்திய நிறுவனங்களும் இதே போல முறைகேடுகள் செய்கிறார்களா என்று தெரியவில்லை,ஆனால் முதலீட்டாளர்கள் அவர்களின் ஆண்டு அறிக்கைகளை முழுதும் நம்புகிறார்கள் என்று எழுதி இருந்தேன்.தற்பொழுது வெளி வந்திருக்கும் சத்யம் கம்பனியின் சேர்மன் ராமலிங்க ராஜுவின் முறைகேடான செயல்களும் அதற்க்கு துணை நின்ற தணிக்கை நிறுவனங்களும் ஒரு மிக பெரிய கேள்வியை எழுப்புகிறது. வேண்டுமென்றே தணிக்கை கம்பனியின் துணையுடன் தவறான கணக்கு வழக்குகளை காட்டி தன் கம்பனியின் பங்குகளின் சந்தை விலை உயர காரணமாக இருந்திருக்கிறார். இது இன்று நேற்று நடந்ததாக இருக்காது .பல காலமாக கையிருப்புகளையும் ,வங்கி கணக்குகளையும் அதிக அளவில் காட்டி அது கிட்டத்தட்ட 5000 கோடி அளவுக்கு வந்துவிட்டது.அதாவது இல்லாத பணத்தை இருப்பதாக காட்டி பங்குதாரர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றி வந்திருக்கிறார்.கம்பனி சட்ட படி கம்பனிகள் காலாண்டு,அரையாண்டு மற்றும் முழு ஆண்டு கணக்கு மற்றும் லாப நஷ்ட கணக்குகளை காட்ட வேண்டும,உரிய அரசு மற்றும் பங்கு சந்தை சார்ந்த நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும். பொதுவாக அந்த அறிக்கைகளில் அதற்க்கு முந்தின காலாண்டு கணக்கு வழக்கு மற்றும் சென்ற ஆண்டு இதே சமயத்தில் உள்ள அறிக்கை இவற்றையும் அதனுடன் தெரிவிக்க வேண்டும். அதை பார்த்து கம்பனியின் நிதி நிலைமையில் முன்னேற்றம் உள்ளதா என்று பங்குதாரர்கள் மற்றும் பங்கு சந்தை தெரிந்து கொள்ள ஏதுவாகும் என்பது தான் இதன் உத்தேசம்.இந்த அறிக்கையை பொறுத்து அந்த கம்பனியின் பங்குகளுக்கு சந்தையில் மவுசு கூடும் குறையும். இதை நன்றாக புரிந்து வைத்துள்ள சத்யம் போன்ற கம்பனிகள் தவறான கணக்குகளை ஒவ்வொரு காலாண்டு அறிக்கையிலும் காட்டி இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளது. இது தணிக்கையாளர்களின் உதவி மற்றும் வங்கிகளின் ஆதரவும் இல்லாமல் எந்த நிறுவனத்தாலும் செய்ய முடியாது.இது தவிர உபெயடு என்று அமெரிக்கா கம்பனியுடன் ஆன ஒப்பந்த ஷரத்துகளை சத்யம் நிறுவனம் மீறி இருக்கிறது. முறைகேடுகளும் செய்துள்ளது. இந்த முறைகேடுகள் காரணமாக சமாளிக்க முடியாத நிலைமை வந்த உடன் Mayatas என்ற கம்பனியின் பங்குகளை முழுவதுமாக சத்யம் நிறுவனம் வாங்குவதாக கூறி மற்றும் ஒரு முறைகேடு செய்ய துணிந்தார். Mayatas என்பது சத்யம் நிறுவனத்தின் இன்னொரு கம்பனி தான். சத்யம் என்ற ஆங்கில எழுத்தை திருப்பி எழுதி பார்த்தால் Mayatas என்று வரும்.இந்த விஷயம் தெரிந்த பங்குதாரர்கள் எதிர்க்கவும் உடனடியாக அந்த முயற்சி கை விடப்படுகிறது. FII என்ற சொல்லப்படும் Foreign Institutional Investment மற்றும் FDI என்று கூறப்படும் Foreign Direct Investment இவைகளுக்கு ஆசைப்பட்டே பல நிறுவனங்கள் தங்களின் பங்கு சந்தையை நிலவரத்தை செயற்கையாக உயர்த்தி காட்ட முயற்சித்து இது போன்ற முறைகேடுகளை செய்கிறது. இது IT துறையில் மட்டுமே நடந்திருக்கம் என்று சொல்வதற்கில்லை. எங்கெல்லாம் பங்கு சந்தையில் ஒரு bouyant market இருந்ததோ அங்கெல்லாம் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.இப்பொழுது வெளி வந்திருப்பது ஒரு சிறு விஷயம் மட்டுமே என்று எனக்கு தோன்றுகிறது. இதே போல மற்ற துறைகளிலும் வேறு பல கம்பனிகளும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.இவர்களின் செயல்பாடுகளால் தான் சென்செக்ஸ் ராக்கெட் வேகத்தில் ஏறியது. முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற்றதும் நமது கம்பனிகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. சென்செக்ஸ் வேகமாக இறங்கு முகத்திற்கு வந்தது. இவர்களின் இந்த விளையாட்டால் பொருளாதார சிக்கல் ,விலை வாசி ஏற்றம், முதலியவைகளால் பொதுமக்கள் அவதி படுகிறார்கள். அரசாங்கம் சட்ட விதிமுறைகளை இன்னும் கடுமையாக்கி SEBI போன்ற அமைப்புகளுக்கு இன்னும் பரவலான் அதிகாரங்களும் வழங்கி இது போன்ற முறைகேடுகள் மேலும் நடக்காமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தொழில் நேர்மை இல்லாமல் தவறுக்கு உடந்தையாக இருக்கும் தணிக்கை நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கவும் சட்ட திருத்தங்கள் தேவை.
Labels:
சத்யம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment