Friday, March 20, 2009

பார்த்ததில் பிடித்தது

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த இரண்டு திரைப்படங்கள் குறித்த வலை பதிவு இது.முதல் படம் வெனஸ்டே (wednesday) என்ற ஹிந்தி படம். தமிழில் கமல்,மோகன்லால் நடித்து "தலைவன் இருக்கின்றான்" என்ற பெயரில் வெளி வர போவதாக கேள்வி.அதனாலயே மிகவும் ஆர்வமுடன் இந்த திரை படத்தை பார்த்தேன்.(அது சரி, இந்த படம் பார்த்து முடித்த பின்பு இந்த படத்திற்கும் இந்த படத்திற்கு தமிழில் வைத்திருக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்து பார்த்து, மூளை குழம்பியது தான் மிச்சம்.சரி படம் வந்த பிறகாவது புரிகிறதா என்று பார்ப்போம்.தமிழ் பட வழக்க படி தலைப்பு பற்றி ஒரு சீனோ அல்லது ஒரு வசனமோ இல்லாமலா இருக்கும்.)ஒரு புதன் கிழமை மும்பை காவல் துறை ஆணையர் பிரகாஷ் ரத்தொடின் (அனுபம் கேர் ) வாழ்க்கையில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் நிகழ்ச்சிகள் தான் இந்த படத்தின் கதை. பிரகாஷ் ஒய்வு பெறும் தருவாயில் அந்த புதன் கிழமை நடந்த நிகழ்ச்சிகளை அவர் விவரிப்பதாக கதை சொல்லபட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் பற்றி காவல் துறையில் எந்த ஆவணமும் கிடையாது,ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை என்று பிரகாஷ் கதையின் ஆரம்பத்திலயே சொல்கிறார்.ஒரு புதன் கிழமை மதியம் 2 மணி அளவில் ஒரு மர்ம நபரிடம் (நஸ்ருதீன் ஷா ) இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு அவருக்கு வருகிறது.அவன் குறிப்பிடும் 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான்.அவனது கோரிக்கையை அலட்சியம் செய்தால் நகரெங்கும் குண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டுகிறான்.பிரகாஷ் அவரது உதவியாளர்களை அழைத்து அவன் குறிப்பிடும் 4 தீவிரவாதிகள் யாரென்று புலனாய்வு செய்ய சொல்கிறார்.கூடவே தகவலை முதல்வருக்கும் தெரிவிக்கிறார்.சற்று நேரத்தில் மீண்டும் ஒரு அழைப்பு வருகிறது.கமிஷனர் அலுவலகத்திற்கு எதிர் புறம் இருக்கும் காவல் நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக மிரட்டுகிறான்.குண்டுகளை செயலிழக்க செய்யும் நிபுணர்களை முடுக்கி விடுகிறார் கமிஷனர்.அவன் ஒரு தொலைக்காட்சி சேனலின் பெண் நிருபரை தொலைபேசியில் அழைத்து,அந்த காவல் நிலையத்திற்கு சென்றால்ஒரு scoop செய்தி கிடைக்கும் என்று சொல்கிறான்.தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு அவன் காவல் துறைக்கு விடும் மர்ம தொலைபேசி அழைப்புகளும்,மிரட்டல்களும்,பெண் நிருபருக்கு தொலைபேசி வாயிலாக சொல்லும் செய்திகளும், தீவிரவாத நபர்களுடன் காவல்துறையின் கைபேசி மூலமாகவே ஸ்பீக்கர் போன் மூலம் பேசுவதுமாக கதை விறுவிறுப்பாக சற்றும் தொய்வில்லாமல் நகருகிறது.இதற்க்கிடயே கமிஷனர் அவனுடன் உரையாடிகொண்டே,நிபுணர்களின் உதவியுடன் அவன் எங்கிருந்து உரையாடுகிறான் என்பதை கண்காணித்து அறிய முற்படுகிறார்.அவன் சொல்கிறபடி செய்துகொண்டே அவனை பிடிக்கும் திட்டத்தில் கமிஷனர் செயல்படும் பொழுது ,திட்டம் சற்று மாறி நால்வரில் மூவர் கொல்லபடுகிறார்கள்.ஒருவனை காவல்துறை தன் பிடியில் வைத்து கொள்ளும் நேரம்,நான்காவது நபரையும் கொல்லும் படி அவன் தொலை பேசியில் மிரட்டுகிறான். இல்லாவிட்டால் நகரெங்கும் குண்டு வெடிக்கும் என்று மீண்டும் மிரட்டுகிறான். நான்காவது நபரையும் கொன்ற உடன் அவன் கமிஷனருக்கு நன்றி தெரிவித்து விட்டு,தான் எங்கும் குண்டு வைக்கவில்லை என்று சொல்லிவிட்டு,அவன் யாரென்று விளக்குகிறான்.(அது இப்பொழுதே தெரிந்து கொண்டால் தமிழ் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் குறைந்து விடும்.மேலும் கமல் கோபித்து கொள்வார்.)இது தான் கதை.நஸ்ருதீன் ஷாவும் அனுபம் கேரும் பிரமாதமாக நடித்துள்ளார்கள்.இந்த படத்தில் பாடல்களே இல்லை.வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டும் ஓடும் ஒரு சிறிய திரைப்படம்.நீரஜ் பாண்டே திரை கதை அமைத்து மிக அழகாக இயக்கி உள்ளார்.தமிழில் மசாலா படம் எடுக்கும் இயக்குனர்கள் இது போன்ற படங்களை பார்க்கமாட்டார்களோ? .நஸ்ருதீன் ஷா பாத்திரத்தை கமலும்,அனுபம் கேர் பாத்திரத்தை மோகன்லாலும் நடிப்பதாக கேள்வி.நல்ல தேர்வு தான்.அடுத்ததாக ஹிந்தியில் கலக்க போகும் ஒரு படம் திரைக்கு வந்துள்ளதாக கேள்வி.குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின் பின்னணியில் பிராக் (firaaq) என்ற படம் வெளி வந்துள்ளதாக சொல்கிறார்கள்.(சரியாக தேர்தல் நேரம் பார்த்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.வேண்டும் என்றே செய்திருப்பார்களோ ?) இயக்குனராக நடிகை நந்திதா தாசின் முதல் முயற்சி தான் இந்த படம்.


இரண்டாவதாக -காஞ்சீவரம் என்ற தமிழ் திரை படம்.

தமிழில் இப்படி ஒரு படம் வந்துள்ளதா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.பிரகாஷ் ராஜ்,ஷ்ரேயா ரெட்டி நடித்த படம்.ப்ரீயதர்ஷன் இயக்கத்தில் வந்துள்ள ஒரு பீரியட் படம் இது.1948 இல் கதை நடப்பதாக காட்டப்படுகிறது.கான்சீவரத்தில் வசிக்கும் ஒரு பட்டு சேலை நெசவாளியின் கதை.கைத்தறியில் பட்டு சேலை நெய்யும் நெசவாளிகளுக்கு,அவர்கள் குடும்ப பெண்களுக்கு பட்டு சேலை வாங்கி தரும் அளவுக்கு பண வசதி இல்லை என்பது தான் கதை கரு.இருந்தாலும் அவர்களுக்கும் அந்த ஆசை உள்ளூர உள்ளது.அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கும் பட்டு சேலை அணியவேண்டும் என்ற ஆசை உள்ளது.தவிர இந்த படத்தில் சற்று கம்யுனிச சிந்தனைகளையும் தூவி உள்ளார்கள்.Master Weavers என்று சொல்லப்படும் முதலாளிகள் ஏழை நெசவாளிகளுக்கு சரியான கூலி கொடுப்பதில்லை என்றும் காட்டியிருக்கிறார்கள்.வேங்கடம் என்ற பட்டு நெசவாளியாக வருகிறார் பிரகாஷ் ராஜ்.தன் திருமணத்தின் பொழுது தனது மனைவிக்கு பட்டு சேலை வாங்கி கொடுத்து,அதை கட்டி கொண்டு தான் அவள் வர வேண்டுமென்று கனவு காண்கிறார்.அதற்காக பணத்தையும் சேமிக்கிறார்.இருந்தும் சேமிப்பு பற்றா குறையினால்,அவரது கனவு பலிக்கவில்லை.வெறும் நூல் சேலையுடன் தான் அவரது மனைவி வருகிறார்.பிறகு தனது மகளின் திருமணத்தில் அவளுக்கு பட்டு சேலை அணிவிப்பேன் என்று மனைவிக்கு வாக்கு கொடுக்கிறார்.இதற்காக 16 ஆண்டுகளாக சிறிது சிறிதாக சேர்த்த பட்டு நூலால் ரகசியமாக ஒரு சேலை இரவெல்லாம் கண் விழித்து நெய்து வருகிறார்.இடையில் கம்யுனிச சிந்தனைகளால் ஒரு தொழிலாளர் தலைவர் ஆகிறார்.தலைவர் ஆனா பின்பும் ,மகளுக்கு பட்டு சேலை கொடுக்க வேண்டும் என்ற ஆசையில்,தான் வேலை பார்க்கும் இடத்தில இருந்தது,தினமும் சிறிது சிறிதாக பட்டு நூல் திருடுகிறார்.இவை கொண்டு தான் மகளுக்கு ரகசியமாக சேலை நெய்து கொண்டிருக்கிறார்.கூலி உயர்வு கேட்டு போராட்டம் முன் நின்று நடத்துகிறார்.மாத கணக்கில் போராட்டம் தொடர்ந்து நெசவாளிகள் பட்டினியில் அவதி படுகிறார்கள்.அந்த நேரம் அவரது மகளுக்கு திருமணம் உறுதியானவுடன்,மகளுக்கு பட்டு சேலை கொடுக்க வேண்டும் என்ற ஆசையில்,வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று கொண்டு எல்லோரையும் வேலைக்கு செல்ல சொல்கிறார்.அதே நேரத்தில் அவரது திருட்டு வெளியாகி கைதாகிறார்.அம்மா இறந்த பின் அப்பாவுடன் வாழ்ந்த வேங்கடத்தின் பெண், அப்பாவும் கைதாகி சிறைக்கு சென்ற பின், விபத்துக்குள்ளாகி ஒரு பக்கம் செயலிழந்து படுத்த படுக்கயாகிறார்.மகளை பார்க்க பரோலில் வரும் வேங்கடத்தின் பார்வையில் தான் கதை flash back ஆக சொல்லப்படுகிறது.வீட்டுக்கு வந்த வேங்கடத்திடம் அவரது மகளை ஒப்படைத்து விட்டு உறவினர்கள் நழுவி செல்கிறார்கள்.பரோலில் வந்த வேங்கடம் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருப்பதால்,செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.உணவில் விஷத்தை கலந்து தனது மகளுக்கு ஊட்டுகிறார்.பின்பு பாதி நெய்த நிலையில் இருக்கும் பட்டு சேலையை எடுத்து கண் மூடி கிடக்கும் மகளுக்கு போர்த்துகிறார். பாதி நெய்த நிலையில் இருந்ததால் முழுவதுமாக மூடுவதற்கு பத்தாத அந்த சேலையை மேலும் கீழும் இழுத்து அங்கம் தெரியாமல் மூட ஒரு பைத்தியத்தை போல வேங்கடம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.இந்த காட்சியுடன் படம் முடிகிறது. திரைப்பட விழாக்களுக்கும்,விருதுக்குமாக எடுத்த திரைப்படம் போல் உள்ளது.வங்காள மற்றும் ஆரம்ப கால மலையாள திரைப்படங்கள் போல இது முழுக்க முழுக்க ஒரு ஆர்ட் படம் போலவே உள்ளது.குறிப்பாக வெளிநாட்டு திரை பட விழாக்களை குறி வைத்து எடுத்த படமாகவே உள்ளது.அதனாலயே திரைக்கு வரும் முன்னே திரை பட விழாக்களுக்கு இந்த படத்தை ப்ரீயதர்ஷன் அனுப்பியுள்ளார் என்றே நினைக்க தோன்றுகிறது.பிரகாஷ் ராஜ் மிக அற்புதமாக underplay செய்து நடித்துள்ளார்.ஷ்ரேயா ரெட்டியும் சிறப்பாக நடித்துள்ளார்.திருவின் ஒளிப்பதிவு மிக அருமை. படத்தின் பெரும்பகுதி flashback இல் சொல்லபடுவதால் நிகழ் காலத்திற்கும் ,கடந்த காலத்திற்கும் இரு வேறு டோன்கள் பயன்படுத்தி இருக்கிறார்.Flashback காட்சிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்ப்பதை போன்ற ஒரு டோன் . நிகழ் காலத்திற்கு வரும் பொழுது அதில் இருந்து நிரம்ப மாறுபட கூடாது என்று நினைத்தோ என்னவோ ஒரு வித sepia டோனில் படம் பிடித்துள்ளார்.மிகவும் மெதுவாக நகரும் கதை ஜனரஞ்சகமாக இல்லாததால்,பொது மக்களிடம் வரவேற்பை பெறுமா என்பது சந்தேகமே.இருந்தாலும் இது ஒரு சிறந்த கலை படைப்பு.இந்திய கிராமங்களின் பீரியட் காலத்தை சித்திரிக்கும் ஒரு சிறந்த கலை படைப்பு.இந்த காலத்தில் பட்டு நெசவாளிகளின் நிலை இவ்வளவு மோசமாக இல்லை என்று நினைக்கிறேன்.அவர்களுக்கு என்று கூட்டுறவு சங்கங்கள் இல்லாத காலத்தில் நடந்த கதை இது.இந்த படத்திலும் பாடல்கள் இல்லை.(ஒரு நான்கு வரி தாலாட்டு பாட்டு வருகிறது.அதை தவிர்த்து வேறு பாடல்கள் இல்லை.)இந்த கதை கருவை இன்றைய காலத்திற்கு ஏற்ற மாதிரி சற்று மாற்றி ,ஒரு பீரியட் படமாக இல்லாமல் எடுத்திருந்தால் இன்னும் அதிகம் சுவாரசியமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.அப்படி எடுத்திருந்தால் ஒரு நல்ல கலை படைப்பு பொது மக்களையும் சென்றடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment